Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all 10627 articles
Browse latest View live

சங்கத்தில் இருந்து நூல் வழங்குவதை நிறுத்தியதால் கைத்தறி நெசவுத்தொழில் முடக்கம்: வேலையின்றி நெசவாளர்கள் பரிதவிப்பு

$
0
0

காரைக்குடி: கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சங்கத்தில் இருந்து நூல் விநியோகிக்காததால், கைத்தறி நெசவுத்தொழில் முடங்கி உள்ளது. இதனால் நெசவாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் 650க்கும் மேற்பட்ட தறிக்கூடங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் கெட்டிச்சாயம் என்பதால் சாயம் போவது இல்லை. செட்டிநாடு காட்டன், புட்டா, கேஸ்மெசரீஸ் முதல்  ரகம், ஜரிகை காட்டன், தொட்டிச்சேலைகள், காட்டன் சுடிதார் மெட்டீரியல் உட்பட பல்வேறு ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் சென்னை, மதுரை, கோவை, டில்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு  விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.நெசவாளர்களுக்கென அமரர் ராஜீவ்காந்தி கூட்டுறவுச்சங்கம், பழனிவேல்ராஜன், வள்ளல் எம்.ஜி.ஆர் கூட்டுறவுச்சங்கம் என 3 சங்கங்கள் இயங்கி வந்தன. சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு நூல்  வழங்கி, அவர்கள் உற்பத்தி செய்து தரும் சேலைகளுக்கு கூலி வழங்கப்படும். இதில் பழனிவேல்ராஜன் மற்றும் வள்ளல் எம்ஜிஆர் சங்கங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டன. கூட்டுறவு சங்கத்தேர்தல் அறிவிப்புக்கு  பின் அமரர் ராஜீவ்காந்தி கூட்டுறவுச்சங்கத்துக்கு இதுவரை தேர்தல் நடத்தாமல், பரமக்குடி உதவி இயக்குநர் அலுவலகத்தின் சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சங்கம் சரியாக செயல்படாமல் முடங்கி போய் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நெசவாளர்களுக்கு நூல் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. நூல் இல்லாததால்  நெசவாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், ‘‘3 மாதங்களுக்கு மேலாக கூட்டுறவுச்சங்கம் முறையாக செயல்படவில்லை. இதனால் நூல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நூல் வழங்காததால் எங்களால் சேலை நெய்ய முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையின்றி தவித்து வருகிறோம். ஒரு சிலர் கட்டிட வேலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. சங்கத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7ம்  தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம்,’’ என்றனர்.இதுகுறித்து உதவி இயக்குநர் ஆனந்தகுமார் கூறுகையில், ‘‘வங்கியில் இருந்து வரவு, செலவு கணக்கு அனுமதி அளித்தவுடன் சங்கம் மீண்டும் செயல்படும்,’’ என்றார்.


வாகனம் நிறுத்த இடம் இல்லை டெல்லியில் தினமும் 400 கார்கள் பதிவு: ஆய்வில் தகவல்

$
0
0

புதுடெல்லி: டெல்லியில் நாள் ஒன்றுக்கு சுமார் 400 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றை நிறுத்த போதிய இடமில்லை என ஆய்வில் தெரிவந்துள்ளது. டெல்லியில் கார்கள் எண்ணிக்கை, வாகன நிறுத்த பிரச்னைகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கூறியிருப்பதாவது: டெல்லியில் நாள் ஒன்றுக்கு 400க்கும் அதிகமான புதிய கார்கள் பதிவு செய்யப்படுகின்றன. டெல்லியின் மொத்த சாலையின் நீளத்தில்,  14 சதவீதம் வாகன நிறுத்தமாக மாறிவிட்டது. தனியார் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு மூன்று  முதல் நான்கு மணி நேரம் மட்டுமே ஓடுகின்றன. இதன் மூலம் சராசரியாக அவை மூன்று வெவ்வேறு வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளது. டெல்லியின் 96 சதவீத பகுதி மூன்று மாநகராட்சிகள் வசம் உள்ளது. இவை 55,000 வாகன நிறுத்தும் இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளன. அத்துடன் 17,500 அடுக்கு வாகன நிறுத்தமும் உள்ளன. இவற்றில் ₹10, ₹20 முதல்  ₹100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, பொது இடங்களை வாகன நிறுத்தமாக்கி சிலர் பணம் வசூலிக்கின்றனர். இதை தடுக்க சட்டம் இல்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நிதிக்கொள்கை கூட்டம் தொடங்கியது

$
0
0

மும்பை:   ரிசர்வ் வங்கி 2 மாதத்துக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறுசீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம், பண வீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய  நடவடிக்கைகள் போன்றவை முடிவு செய்யப்படுகின்றன. 3 நாள் நடைபெறும் இந்த கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் நேற்று தொடங்கியது. 6 பேர் குழுவுடன் விவாதித்த பிறகு நாளை வட்டி விகிதம்  உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும்.

வெங்காயம் விலை சரிவு

$
0
0

வேலூர்: வேலூர் மார்க்கெட்டு ஆந்திர, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சாம்பார் வெங்காயம் ஈரோடு, ஒட்டன்சத்திரம், தேனி வட்டாரங்களில் இருந்து கொண்டு  வரப்படுகிறது. 10 முதல் 15 டன்கள் வரை வேலூர் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் இறக்குமதியாகிறது. லாரி ஸ்டிரைக்கால் வெங்காயம் கிலோ ₹30 முதல் ₹40 வரை விற்பனையானது. லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆனதால்  விலை சரிந்துள்ளது. வேலூர் மார்க்கெட்டில் நேற்று பெரிய வெங்காயம் ₹15 முதல் ₹20  வரை விற்பனையானது. சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்று ₹25 வரை விற்பனையானது.

ஜூலை 31 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.22; டீசல் ரூ.71.63

$
0
0

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.22 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.63-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிவு

$
0
0

மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.68.69 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.68.67 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிவு

$
0
0

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த ஆறு நாள் வர்த்தகத்தில் குறியீடு 998.03 புள்ளிகளாக அதிகரித்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 113.55 புள்ளிகள் சரிந்து 37,381.05 புள்ளிகளாக உள்ளது. உலோகம், டெக், ஐடி, உள்கட்டமைப்பு, எஃப்எம்சிஜி, வங்கி, பி.எஸ்.யூ, மூலதன பொருட்கள் மற்றும் எண்ணெய் & எரிவாயு போன்ற நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.40 புள்ளிகள் குறைந்து 11,284.15 புள்ளிகளாக உள்ளது.எச்.டி.எஃப்.சி, வேதாந்தா, டாட்டா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, கொட்டக் பாங்க், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ மற்றும் கோல் இந்தியா போன்ற நிறுவன பங்குகள் விலை 1.14% வரை சரிந்து காணப்பட்டது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.03%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.56%, மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.39% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.57% வரை குறைந்து முடிந்தது.

தொடர்ந்து 3வது மாதமாக எகிறியது மானிய சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ1.76 உயர்வு

$
0
0

புதுடெல்லி: மானிய விலையில் விற்பனை செய்யப்படும் சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ1.76 உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் காஸ் விலையை நிர்ணயம் செய்கின்றன. வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த சிலிண்டருக்கான மானியம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 14.2 கிலோ எடை கொண்ட மானிய சிலிண்டர் விலை சென்னையில் ரூ2.42 அதிகரிக்கப்பட்டு ரூ481.84 ஆகவும், டெல்லியில் ரூ493.55 ஆகவும் இருந்தது. இதை தொடர்ந்து ஜூலை மாத சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானிய சிலிண்டர் டெல்லியில் ரூ2.71 அதிகரித்து, ரூ496.26 ஆகவும் சென்னையில் ரூ2.83 அதிகரித்து ரூ484.67ஆகவும், மானிய மற்ற சிலிண்டர் ரூ58 அதிகரித்து ரூ770.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.தொடர்ந்து இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் வெளியிட்ட அறிவிப்பில், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் டெல்லியில் ரூ1.76 உயர்த்தப்பட்டு ரூ498.02 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவால் விலை உயர்த்தப்படுகிறது. இதற்கான மானியத்தை அரசு வழங்குகிறது. இருப்பினும், இதற்கேற்ப உயர்த்தப்பட்ட விலையில், மானியமற்ற சிலிண்டர் விலையின்படி ஜிஎஸ்டி கணக்கிடப்பட்டு மானியமற்ற சிலிண்டருக்கான விலையும் உயர்த்தப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மானியமற்ற சிலிண்டர் விலை ரூ35.50 உயர்த்தப்பட்டு ரூ789.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ55.50 உயர்த்தப்பட்டது. மானிய சிலிண்டர் வாங்குவோருக்கு ரூ35.50ல் ரூ1.76 போக ரூ33.74 கூடுதலாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன்படி டெல்லியில் சிலிண்டர் ஒன்றுக்கு மானியமாக ரூ291.48 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


திவால் வங்கியை மீட்க மக்கள் பணத்தை பயன்படுத்தும் எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப்பெற முடிவு

$
0
0

* எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி * திரிணாமுல் காங். பெருமிதம்புதுடெல்லி: நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதாவை (எப்ஆர்டிஐ ) மத்திய அரசு திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதா 2017-ஐ  நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு - 2017 மசோதா’வுக்கு (எப்ஆர்டிஐ மசோதா) ஒப்புதல் அளித்தது. பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தீர்வுக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்படும். இதை செயல்படுத்த இயக்குநர் குழு அமைக்கப்படும். வங்கி, கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் அபாய கட்டணத்தை எட்டியிருப்பதாக கருதப்பட்டால், அந்த நிறுவனத்தை மூடுவதற்கும், வேறொரு நிதி நிறுவனம் அல்லது வங்கியுடன் இணைப்பதற்கும், ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்பவும் இந்த கழகத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படும். மசோதாவில் உள்ள பிரிவு 52ன்படி , வங்கி திவாலானால் டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை கோரும் உரிமையை இழக்கிறார்கள். எனவே, மசோதாவில் உள்ள இந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் எனவும்,  வாடிக்கையாளர் வங்கியில் போட்ட பணத்துக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களிடையேயும் இந்த மசோதா குறித்து பீதி ஏற்பட்டது. பலர் வங்கி ஏடிஎம்கள் மூலம் தங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடந்தது. அப்போது, இந்த மசோதா திரும்பப்பெற உள்ளதாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சவுகதா ராய் தெரிவித்தார். அவர் பேசியதாவது: நிதியமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதில், நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதாவை (எப்ஆர்டிஐ ) மத்திய அரசு திரும்பப்பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. வங்கி டெபாசிட்தாரர்கள் பணம் வங்கி திவாலானால் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அடுத்த  ஆண்டு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்க இது வழி வகுக்கும் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது என்றார். மசோதாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டபோதும், பூபேந்திர யாதவ் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. அப்போது, சர்ச்சைக்குரிய பிரிவை நீக்குவதாகவும், டெபாசிட் தொகைக்கான காப்பீடு ரூ1 லட்சம் என உள்ளதை அதிகரிப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மசோதாவை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடிக் கிருத்திகையையொட்டி வெள்ளி வேல் விற்பனை அமோகம் : நகை வியாபாரிகள் மகிழ்ச்சி

$
0
0

ஆம்பூர்: ஆடிக்கிருத்திகையையொட்டி ஆம்பூரில் வெள்ளி வேல் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் நகை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆடிக் கிருத்திகையையொட்டி  வரும் 4ம் தேதி பரணி காவடியும், 5ம் தேதி ஆடி கிருத்திகையும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கைலாசகிரி, ஞானமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை மீது உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆம்பூர், பெரியாங்குப்பம், உம்ராபாத், துத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணி, பழனி, ரத்தினகிரி உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களுக்கு நடைபயணமாக சென்று நேர்த்தி கடன் செலுத்துவர். பால்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து சென்று வழிபட்டாலும், உண்டியல்களில் முருகனுக்கு உகந்த வெள்ளி வேல் காணிக்கை செலுத்துவது வழக்கம். இதையொட்டி 4 கிராம் முதல் 8 கிலோ வரையிலான வெள்ளி வேல் தயாரிக்கும் பணி ஆம்பூரில் உள்ள ஷராப் பஜாரில் மும்முரமாக நடந்த வருகிறது. திறமையான தொழிலாளர்களை கொண்டு இந்த வேல்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் பெங்களூருவை சேர்ந்த வியாபாரிகளும், ஆம்பூர் வந்து வெள்ளி வேல்களை வாங்கி செல்கின்றனர். வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளதால் நகை செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமரியில் ரூ32 கோடி ரப்பர் வர்த்தகம் பாதிப்பு

$
0
0

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதியில் ரப்பர் விவசாயத்தை நம்பியே  தொழிலாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து, தினமும் 250 டன் ரப்பர் உற்பத்தியாகிறது. ஒரு கிலோ ரப்பர் ரூ131க்கு விலை போகிறது. இதனால் தினமும் சுமார் ரூ32 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. நேற்று முன்தினம் முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் ரூ32 கோடி வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளதாக ரப்பர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி விதிப்பதில் பாரபட்சத்தால் கோவை கிரைண்டர் விற்பனை பாதிப்பு : கோவை தயாரிப்புக்கு வரி 12% வடமாநில தயாரிப்புக்கு 5%

$
0
0

கோவை: ஜிஎஸ்டியில் வட மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆட்டா சக்கி கிரைண்டருக்கு 5 சதவீதமும், கோவையில் உற்பத்தியாகும் வெட் கிரைண்டருக்கு 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ள பாரபட்சத்தால், கோவை வெட்கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் 1,200 வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களும், அதனை நம்பி 40 ஆயிரம் தொழிலாளர் உள்ளனர். கோவையில் இருந்து வெட்கிரைண்டர்கள் தமிழர்கள் வாழும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும், வட மாநில நகரங்களுக்கும், சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் செல்கிறது. ஜிஎஸ்டிக்கு முன் வெட் கிரைண்டர்களுக்கு 5 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் போது வெட் கிரைண்டர்களுக்கான வரி 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான கிரைண்டர் ஒன்றிற்கு ரூ.ஆயிரம் வரை விலை உயர்ந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டது. பின்னர், வரியை குறைக்க வேண்டும் என்று முறையிட்டதின் பலனாக 28 சதவீதம் 12 சதவீதமாக மாற்றப்பட்டது. அதன் காரணமாக, விலை குறைந்து, விற்பனை மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில், வட மாநிலத்தில் கோதுமை அரைக்க பயன்படுத்தும் ஆட்டா சக்கி கிரைண்டருக்கு ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்ட 28 சதவீதம் 5 சதவீதமாக மாற்றப்பட்டது. ஆட்டா சக்கி கிரைண்டருக்கும், வெட் கிரைண்டர்களுக்கும் வித்தியாசம் இல்லை. ஆட்டா சக்கி கிரைண்டர் மூலம் இட்லி, தோசைக்கான மாவு அரைக்க முடியும். இதனால் ஜிஎஸ்டி வரி குறைப்பை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்ட வட மாநில விற்பனையாளர்கள், ஆட்டா சக்கி கிரைண்டரை தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் கோவை வெட்கிரைண்டர்கள் விற்பனையும், உற்பத்தியும் 10 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வெட் கிரைண்டர்களுக்கு ஆட்டா சக்கி கிரைண்டர்களுக்கு நிர்ணயித்தது போல் 5 சதவீதம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலனில்லாததால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து கோவை  வெட்கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்  சாஸ்தா ராஜா கூறுகையில், ஜிஎஸ்டி கவுன்சில் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக அமைச்சர் ஜெயக்குமார் இடம்பெற்றுள்ளார். அவர் மூலம் வெட்கிரைண்டருக்கு வரியை 5 சதவீதமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளோம். அவரும் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளார். இதனால் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வெட்கிரைண்டருக்கு வரி குறையும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

சீனாவின் கடனை அடைக்க பயன்படுத்தும் என்பதால் பாகிஸ்தானுக்கு நிதியுதவி தரக்கூடாது : சர்வதேச நிதியத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை

$
0
0

வாஷிங்டன்: ‘சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க பயன்படுத்தும் என்பதால், பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் நிதியுதவி அளிக்கக் கூடாது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான்கானுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதை சமாளிக்க, சர்வதேச நிதியத்திடம் ரூ.82 ஆயிரம் கோடி கடன் வாங்குவது பற்றி பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருவதாக ‘தி பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையில் செய்தி வெளியானது. சர்வதேச நிதியத்திடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 2வது முறையாக கோரப்படும் இந்த கடனுதவி, பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் என நிபுணர்களும், தொழிலதிபர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சீனாவிடம் இருந்தும், சீன வங்கிகளிடம் இருந்தும் பாகிஸ்தான் ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாய்  கடன் வாங்கியுள்ளது. இது போதாமல் மேலும் கடன் கேட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானின் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதை அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் நிதியுதவி அளிப்பது விவேகமானது அல்ல. அதை சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்கத்தான் பாகிஸ்தான் பயன்படுத்தும். அதனால், சர்வதேச நிதியம் தவறு செய்யக் கூடாது’’ என்றார். சர்வதேச நிதியத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘நிதியுதவி கேட்டு  பாகிஸ்தானிடம் இருந்து இதுவரை எந்த வேண்டுகோளும் வரவில்லை. இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடமும் பேசவில்லை’’ என்றார். கடந்த 1980ம் ஆண்டிலிருந்து சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் 14 முறை கடன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்.01 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.26; டீசல் ரூ.71.62

$
0
0

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.26 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.62-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஒட்டன்சத்திரம் பகுதியில் தயாரித்து மும்பை செல்லும் மூங்கில் கூடைகள்: பாரம்பரிய தொழிலை பாதுகாக்க வலியுறுத்தல்

$
0
0

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் தயாரிக்கப்படும் மூங்கில் கூடைகள் மும்பைக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் வரவால் நசிந்து வரும் இத்தொழிலை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் பல ஆண்டுகளாக மூங்கில் கூடைகள் தயாரிக்கும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் மூங்கிலில் இருந்து   சாப்பாட்டு கூடை, தட்டு, கோழி பஞ்சாரம், முறம், விசிறி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவை தமிழகம் மட்டுமின்றி மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்படுகின்றன.தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 300 குடும்பத்தினர் மூங்கில் கூடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சாப்பாட்டு கூடை 40 முதல் 50க்கும், கோழி பஞ்சாரம் 350க்கும், முறம் 50க்கும், விசிறி 40க்கும் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதவிர மண்பாண்ட பொருட்களும் தயாரித்து வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்களின் வரவால் மூங்கில், மண்பாண்ட பொருட்கள் தொழில் நசிந்து வருகிறது. இதனால் இதனை நம்பி வாழும் நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். வரும் ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதை முறையாக அமல்படுத்தி பாரம்பரிய மூங்கில், மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிலை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


தொடர்ந்து 2வது முறையாக வட்டி அதிகரிப்பு: வீடு, வாகன கடன் வட்டி உயரும்: பண வீக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

$
0
0

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான வட்டியை கால் சதவீதம் உயர்த்தி 6.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இதனால், வீடு,வாகன கடன்களுக்கான வட்டி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. முன்னதாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் 6 பேர் குழு, கடந்த திங்கட்கிழமை முதல் ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை உர்ஜித் படேல் நேற்று அறிவித்தார். இதில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதிக்கொள்கை சீராய்வு குழுவில் இருந்த 6 பேரில் 5 பேர் வட்டியை உயர்த்த பரிந்துரைத்துள்ளனர். அதன் அடிப்படையில் வட்டி உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போவும் கால் சதவீதம் உயர்த்தி 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்எஸ்எப் எனப்படும், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 2வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 0.5 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி முன்பு 6 முறை வட்டியை குறைத்தது. கடைசியாக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி கால் சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயித்திருந்தது. அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வு பண வீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் உயர்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் பண வீக்கம் 4.6 சதவீதமாகவும், 2ம் அரையாண்டில் 4.8 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.  ஏப்ரல் - செப்டம்பர் அரையாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் - 7.6 சதவீதம், நடப்பு நிதியாண்டில் இது 7.4 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அடுத்த சீராய்வு கூட்டம் அக்டோபர் 3ம் தேதி தொடங்குகிறது. ஏற்கெனவே சில வங்கிகள் கடன் மற்றும் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளன.

தொழிலாளர்கள் சேமிப்பு கரையும்; சம்பளம் உயரும் பிஎப் பங்களிப்பு தொகை 10 சதவீதமாக குறைகிறது: மத்திய அரசு பரிசீலனை

$
0
0

புதுடெல்லி: தொழிலாளர்கள் பிஎப் பங்களிப்பு தொகையை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் கையில் வாங்கும் சம்பளம் அதிகரிக்கும். எனினும், இது தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் செயல் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  நிறுவனங்களில் பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் 12 சதவீதம் பிஎப்க்காக  (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு நிறுவனங்களின் பங்களிப்பாக சேர்க்கப்படும். இதன்படி பிஎப் நிதியில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு சேர்ந்து 24 சதவீதம் வரவு வைக்கப்படும். இதில் இருந்து ஓய்வூதியத்துக்காக ஒதுக்கீடு செய்தது போக எஞ்சிய தொகையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வீடு கட்டவும், திருமணம், மருத்துவ செலவுகளுக்கு முன்பணமாக எடுத்துக்கொள்ள முடியும். இந்நிலையில், பிஎப் பங்களிப்பை 10 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சமூக பாதுகாப்புக்கான நடவடிக்கையாக, அனைத்து ஊழியர்களுக்கும் பிஎப் பிடித்தம் செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது. தற்போது சுமார் 10 ேகாடி பேர் சமூக பாதுகாப்பு திட்டத்தில் உள்ளனர். இதை 50 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போதைய பங்களிப்பான 12 சதவீதத்ைத 10 சதவீதமாக குறைக்க உத்தேசித்துள்ளோம்.  தற்போது ஒரு நிறுவனத்தில் 20க்கும் கீழான எண்ணிக்கையில் ஊழியர்கள் இருந்தால் 10 சதவீத பிஎப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இனி இந்த வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் 10 சதவீதம் என்ற அளவில் பிஎப் பிடித்தம் இருக்கும். பிஎப் பங்களிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழிலாளர் அமைச்சக குழு மேற்கண்ட பரிந்துரையை அளித்துள்ளது. பிஎப் பங்களிப்பை 10 சதவீதமாக ஆக்குவது தொழிலாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் பலன் அடைவார்கள். ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளம் அதிகமாக இருக்கும். நிறுவனங்களுக்கும் சுமை குறையும் என்றனர். வயிற்றில் அடிப்பதா? தொழிற்சங்கத்தினர் கொதிப்புமத்திய அரசு பிஎப் பங்களிப்பை குறைப்பது குறித்து தொழிற்சங்கத்தினர் சிலர் கூறியதாவது: ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் அதிகமாக இருக்கலாம்.  ஆனால் அவர்களது எதிர்கால சேமிப்புக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே பிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்போது பங்களிப்பு குறைந்து விட்டால் வட்டி இன்னும் குறைவாக கிடைக்கும். ஊழியர்கள் வாங்கும் சம்பளம் உயரும் அதேநேரத்தில், நிறுவனங்களின் பங்களிப்பான 2 சதவீதம் கிடைக்காமலேயே போய்விடும். எனவே, இதனால் தொழிலாளர்களுக்குதான் கடும் இழப்பு. சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதும் அதில் அதிகம் பேர் பலனடைய செய்வதும் வரவேற்கத் தக்கதுதான். அதேநேரத்தில், தொழிலாளர்கள் பெற்றுவரும் பலனை பறித்து அளிப்பது எந்த வகையில் நியாயம்?. இது தொழிலாளர்களின் உரிமையை பறித்து அவர்கள் வயிற்றில் அடிக்கும் செயல் என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 96,483 கோடி

$
0
0

புதுடெல்லி:  நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை 66 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முந்தைய மாதம் இந்த எண்ணிக்கை 64.69 லட்சமாக இருந்தது. மொத்த ஜிஎஸ்டி நிகர வருவாய் கடந்த ஜூலை மாதத்தில் 96,483  கோடியாக இருந்துள்ளது.  இதில் மத்திய ஜிஎஸ்டியாக 15,877 கோடி, மாநில ஜிஎஸ்டி 22,293 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 49,951 கோடி, செஸ் வரியாக 8,362 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி மூலம் கிடைத்த 794 கோடியும் அடங்கும்.   கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக 3,899 கோடி வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. )சமீபத்தில் 88 பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டன. இது வரி வசூலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை  என நிதியமைச்சகம் கூறியுள்ளது.

திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் கலப்பட டீத்தூள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

$
0
0

திருப்பூர்:  திருப்பூரில் ஒரு வீட்டில் வைத்திருந்த ஒரு டன் எடையுள்ள கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் முருகேசன் என்பவரது வீட்டில் கலப்பட டீத்தூள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவரது வீட்டில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி, அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் பாக்கெட், பாக்கெட்டாக மூட்டைகளில் டீத்தூள் இருந்தது. அவற்றை ஆய்வு செய்ததில் அவை கலப்பட டீ துாள் என தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் வைத்திருந்த ஒரு டன் எடையுள்ள கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சாயமேற்ற வைத்திருந்த பவுடர்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது:  டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதாக வந்த புகாரையடுத்து, பேக்கரி, ஓட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பெருமாநல்லூர் மற்றும் பெரியாயிபாளையம் பகுதிகளில் இருந்த பேக்கரிகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தியது தெரியவந்தது.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரிடம் இருந்து டீத்தூள் வாங்கியதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தி, கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் குடித்தால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.   எனவே பறிமுதல் செய்யப்பட்ட டீத்தூளை தர பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உள்ளோம். இதன் முடிவு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வாத்து முட்டைக்கு கிராக்கி 10 ரூபாய்க்கு விற்பனை

$
0
0

நெல்லை: வாத்து முட்டைகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. நெல்லையில் ஒரு முட்டை 10க்கு விற்கப்படுகிறது. கிராமப்புறங்களில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்கு அடுத்ததாக ஏராளமானோர் வாத்து வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படும் வாத்து மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. இதனால் பலர் குஞ்சுகளை மொத்தமாக வாங்கியும், தங்களிடமுள்ள முட்டைகளை அடைகாக்க வைத்தும் வாத்து கூட்டத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.  சிலர் ஒரு வாத்து 250க்கு வாங்கி  வளர்க்கின்றனர். கால்வாய், வயல்பரப்புகளில் மேயவிட்டும்,  ரைஸ்மில்களில் கிடைக்கும் அரிசி குருணையை ஊறவைத்தும் வாத்துகளுக்கு இரை கொடுக்கின்றனர். நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் குறிச்சி, மானூர் பகுதிகளில் சிலர் வாத்துகளை வளர்க்கின்றனர்.  பாளையங்கோட்டை மார்க்கெட்டில் ஒரு வாத்து முட்டை 10க்கு விற்கப்படுகிறது. சாதாரண கோழி முட்டைகளை விட இரு மடங்கு கட்டணத்தில் விற்கப்பட்டாலும், வாத்து முட்டைகளுக்கு நல்ல மவுசு உள்ளது.

Viewing all 10627 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>