Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all 10627 articles
Browse latest View live

விஷமுறிவு மருந்தாக பயன்படும் ஊமத்தைக்காய் பறிப்பு தீவிரம் : ஒரு கிலோ ரூ50க்கு விற்பனை

$
0
0

தேனி : தேனி பகுதியில் மருத்துவ குணம் கொண்ட ஊமத்தைக்காய்களை பறிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இக்காய்கள் ஒரு கிலோ ரூ50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆங்கில மருத்துவம் இருந்தாலும், இன்னமும் சித்த மருத்துவத்திற்கான முக்கியத்துவமும் அதிகரித்தே வருகிறது. இதற்கான மூலிகை செடிகள் காடு, மலைகள் சென்றுதான் பறிக்க வேண்டும் என்பதில்லை. வீடுகளுக்கு அருகில் மானாவாரியாக முளைத்துள்ள செடிகளில் பல மருத்துவ குணமுள்ளவையாக உள்ளன. இதில் குப்பைமேனி, ஆமணக்கு, ஊமத்தை, கல்முறிஞ்சி போன்ற தாவரங்கள் வீடுகளைச் சுற்றி குப்பைப் பகுதியில் முளைத்திருக்கும். தற்போது தேனி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக சாலையோரங்கள், காலி வீட்டுமனையிடங்களில் இவை அதிகளவில் முளைத்துள்ளன. இதில் சித்த மருத்துவத்திற்கு தேவையான ஊமத்தை காய் பறிக்க ஏராளமான பெண்கள் தேனியில் பல இடங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில், ஆண்டிபட்டியில் சித்தமருத்துவ தயாரிப்புக்காக ஊமத்தை, ஆமணக்கு, குப்பைமேனி, வேப்பங்கொட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர். நாங்கள் இந்த மூலிகை தாவரங்களை பறித்து சென்று விற்பனை செய்வோம். இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ300 வரை கிடைக்கும். தற்போது மழை பெய்துள்ளதால் விஷமுறிவுக்கான ஊமத்தை காய்கள் அதிகளவில் கிடைக்கிறது. இவற்றை காயவைத்து கிலோ ரூ50 வரை விற்கிறோம்’’ என்றனர்.


விளைச்சல் சரிவால் பருத்தி விலை கிடுகிடு: விவசாயிகள் மகிழ்ச்சி

$
0
0

ஒட்டன்சத்திரம் : பருத்தி விளைச்சல் குறைந்தாலும், விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தியை அதிக அளவு சாகுபடி செய்துள்ளனர். பருத்தி செடி பருவத்திற்கு வர 3 மாதமாகும். அடுத்தடுத்து 3 மாதங்கள் காய் எடுப்பு இருக்கும். நன்கு விளைச்சல் கண்டால், ஒரு ஏக்கருக்கு 60 மூட்டைகள் வரை (ஒரு மூட்டை 40-50 கிலோ) அறுவடையாகும். அஸ்வினி, காய் துளைப்பான் போன்ற பூச்சி வகைகள் பருத்தியை பெரிதும் பாதிக்கும். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி, ரெட்டிஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவரி நிலங்களில் பருத்தி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கனமழை, பூச்சி தாக்குதலால், நடப்பாண்டில் பருத்தி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ5,000 முதல் ரூ5,100 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு குவிண்டால் (100 கிலோ) பருத்தி ரூ5,500 முதல் ரூ6,500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பருத்தி அறுவடை பணிக்கு ஒரு நாள் கூலியாக ஒரு நபருக்கு ரூ250 வரை வழங்கப்படுகிறது. பருத்தி விளைச்சல் குறைந்ததால் வருத்தத்தில் இருந்தோம். தற்போது விலை அதிகம் போவது மகிழ்ச்சியை தருகிறது’’ என்றனர்.

ஆயில், புண்ணாக்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு வேப்பங்கொட்டை வரத்து அதிகரிப்பு ; வேப்ப எண்ணெய்க்கு வெளிநாடுகளில் தனிமவுசு

$
0
0

சேலம் : வேப்பங்கொட்டை சீசன் காரணமாக எண்ணெய், புண்ணாக்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதுகுறித்து சேலம் லீ பஜார் தனியார் தொழிற்சாலை உரிமையாளர் பெரியசாமி கூறியதாவது: இந்தியாவில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வேப்பங்கொட்டை, வேப்பம்பழம் வரத்து இருக்கும். தமிழகம், ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் வேப்பங்கொட்டை கிடைக்கிறது. கிராமப்புறங்களில் கூலி வேலை செய்யும் பெண்கள் வேப்பங்கொட்டையை சேகரித்து, ைசக்கிள் வியாபாரிகளிடம் விற்கின்றனர். அவர்கள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டுவரப்படுகிறது. தொழிற்சாலைகளில் புண்ணாக்கு, எண்ணெய் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வருகிறோம். இதை தவிர சோப்பு, மாத்திரை, மருந்து, உரம், கொசுவிரட்டி உற்பத்தி செய்யும் பெரிய கம்பெனிகள் விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். ஒரு கிலோ வேப்பங்கொட்டை ரூ40 முதல் ரூ45 எனவும், வேப்பம் பழம் ரூ15 முதல் ரூ18 வரை வாங்குகிறோம்.வேப்ப எண்ணெய்க்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், லண்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் மவுசு அதிகம். இந்த நாடுகளில் தீக்காயம், தோல் நோய்களுக்கு வேப்பம் எண்ணெய்யை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தற்போது சீசன் என்பதால், ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கு டன் கணக்கில் வேப்பங்கொட்டை வந்து கொண்டிருக்கிறது. இந்த 2 மாதத்தில் ஒரு ஆண்டுக்கு தேவையான வேப்பங்கொட்டை வாங்கி, கொள்முதல் செய்து வைத்து கொள்வோம். வேப்பங்கொட்டையை காயவைத்து, சுத்தம் செய்து குடோன்களில் சேமித்து வைத்து, அவ்வப்போது பொருட்கள் உற்பத்தி செய்யும்போது பயன்படுத்திக் கொள்வோம். தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட வேப்பம் எண்ணெய், புண்ணாக்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது என்றார். இவ்வாறு பெரியசாமி கூறினார்.

காரைக்காலில் இருந்து 20 டன் கணவாய் மீன் ஏற்றுமதி

$
0
0

காரைக்கால் : காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வலையில், ஏற்றுமதி தரம் வாய்ந்த கணவாய் மீன் அதிமாக சிக்கியது. இரு தினங்களாக சுமார் 20 டன் கணவாய் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. காரைக்கால் மீனவர்கள் வலையில் கடந்த சில வாரமாக ஏற்றுமதி தரம் வாய்ந்த பெரிய அளவிலான மீன்கள் அதிகம் சிக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த மீனவர்கள் வலையில், கடந்த ஒரு வாரமாக ஓடு கணவாய், ஆக்டோபாஸ் கணவாய், ஊசி கணவாய் மீன்வரத்து அதிகரிக்கத்து வருகியது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் 8 ஆயிரம் கிலோவும், நேற்று சுமார் 12 ஆயிரம் கிலோவும் சிக்கியது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 20 கடல் மைல் தூரமுள்ள வேதாரண்யம், கோடியக்கரை கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களின் வலையில், சாதாரண மீன்களோடு குறைவாக கிடைத்து வந்த கணவாய் மீன்வரத்து, கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியுள்ளது.ஓடு கணவாய் கால் கிலோ முதல் அரை கிலோ வரை உள்ளது. இந்தவகை கணவாய் குறைவாக கிடைத்தமையால் கிலோ ரூ300க்கும், ஆக்டோபாஸ் கனவாய், 100 கிராம் முதல் அரை கிலோ வரை உள்ளது. இதன் விலை ரூ225க்கு ஏலம் போனது. ஊசி கணவாய் 100 கிராம் முதல் 200 கிராம் வரை உள்ளது. இந்த கணவாய் மீன் கிலோ ரூ150 முதல் ரூ180 வரை ஏலம் போனது. இதில், ஓடு கணவாய் ஆக்டோபாஸ், கணவாய் மீன்களை பதப்படுத்தி வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும். ஊசிக்கணவாய், கேரளா போன்ற வெளிமாநிலத்திற்கும், உள்ளூரிலும் விற்பனை செய்யப்படுகிறது. முள் இல்லாததால், குழந்தைகள் இந்த கணவாய் மீனை விரும்பி சாப்பிடுவார்கள்.

ஜூலை 29 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.22; டீசல் ரூ.71.63

$
0
0

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.22 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.63-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தேவை குறைந்ததால் வெள்ளி விலை வீழ்ச்சி: கிலோவுக்கு 1000 சரிவு

$
0
0

சேலம்: ஆடி மாதம் என்பதால் வெள்ளியின் தேவை குறைந்ததால், வெள்ளி கிலோவுக்கு 1000 வரை விலை சரிந்துள்ளது.சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் முகூர்த்தங்கள் இருந்ததால், வெள்ளியின் தேவை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வெள்ளியின் விலை உயர்ந்தது. ஆடி  மாதம் தொடங்கியதில் இருந்தே வெள்ளியின் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வெள்ளி பொருட்களின் குறையும். ஆடி மாதம் என்பதால் முகூர்த்தங்கள் இல்லை. இதன் காரணமாக வெள்ளி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது. இதனால், வெள்ளியின் விலை  சரிந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ வெள்ளி 40,500 என விற்றது. தற்போது கிலோவுக்கு 1000 சரிந்து, 39,500 என விற்பனை செய்யப்படுகிறது. வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 10 கிராம் முதல் 30 கிராம் எடையுள்ள விநாயகர் உருவம் பதித்த வெள்ளி நாணயம் உற்பத்தி தொடங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருப்பதால், உற்பத்தி  செய்யப்படும் விநாயகர் நாணயங்களை அவ்வப்போது தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

ஒரு நிமிடம் பேச 60 கட்டணம் மீனவர்கள் வசதிக்கு சாட்டிலைட் போன்: பிஎஸ்என்எல் அறிமுகம்

$
0
0

நாகர்கோவில்: மீனவர்கள், மலைவாழ் பகுதி மக்களின் வசதிக்காக 1 லட்சம் மதிப்பில் சாட்டிலைட் போனை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. செயற்கைகோள் வழியாக தொலைபேசி சேவையை (சேட்டிலைட் போன்) மக்களுக்கும் அனுமதியை பிஎஸ்என்எல்-க்கு மட்டும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒரு சாட்டிலைட் ேபான் விலை 70 ஆயிரம். மேலும், ஜிஎஸ்டி 28  சதவீதமும்,  வயர்லெஸ் பிளானிங் கோஆர்டினேசன் கட்டணமாக 14,250 கட்டணமும் செலுத்த வேண்டும். அந்த வகையில் ஒரு சாட்டிலைட் போனை வாங்க 1 லட்சத்து 3 ஆயிரத்து 850 கட்டணம் செலுத்த வேண்டும். சாட்டிலைட் போன் சேவை பிஎஸ்என்எல் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டபோதிலும் அது பல்வேறு அரசு துறைகளின் அலுவலக அதிகாரிகள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது முதல்  முறையாக பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு வழங்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. இதற்கு முதலில் கருவிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கட்டணம் 1180, ஜிஎஸ்டி 18 சதவீதத்துடன்  செலுத்த வேண்டும். அரசு பயன்பாடு, வணிக பயன்பாடு என்று இருவித திட்டங்கள் உள்ளன. இதில் வணிக பயன்பாட்டிற்கு இணைப்பு பெற்ற பின்னர் பதிவுகட்டணம் 1000, செயல்பாட்டு கட்டணம் 500 ஆகியவற்றுடன் பயன்பாட்டுக்கு  தகுந்தவாறு கட்டணம் செலுத்திட வேண்டும். வணிக பயன்பாட்டிற்கு கட்டணம் மாதம் 2000 (1320க்கு பேசிக்கொள்ளலாம்) ஆகும். ஆண்டுக்கு 22,000 (5,840க்கு பேசிக்கொள்ளலாம்).  இதில் தேவையான சேவையை தேர்வு செய்துகொள்ளலாம். சாட்டிலைட் போனில் பேசுவதற்கும், அழைப்பை பெறுவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நிமிடத்திற்கு கால் கட்டணம் மாதத்திற்கான பிளானுக்கு 60  ஆகும். ஆண்டு பிளானில் ஒரு நிமிடத்திற்கு 55 ஆகும். சர்வதேச கால்களுக்கு ஒரு நிமிடம் பேச 260 கட்டணம் ஆகும். உள்ளூர் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ₹60ம், சர்வதேச எஸ்எம்எஸ்-க்கு ₹260 கட்டணம் ஆகும் என்று பிஎஸ்என்எல்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆன்டனாவுடன் ஹேண்ட் செட்சாட்டிலைட் போன் ஆன்டனாவுடன் கூடிய ஹேண்ட்செட் மற்றும் ஆன்டனா இல்லாததும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. பேட்டரியுடன் சேர்த்து 318 கிராம் எடைகொண்டதாக இருக்கும். 8 மணிநேரம் பேச தகுந்ததாகவும், நிலையாக  100 மணி நேரம் தாங்கும் வகையில் அகற்றத்தக்க பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. பேசுவதற்கும், எஸ்எம்எஸ், வாய்ஸ் மெயில் அனுப்ப, எஸ்எம்எஸ் டூ இமெயில், ஜிபிஎஸ் லொகேஷன் டேட்டா போன்ற சேவைகளையும் இந்த  ஹேண்ட் செட் மூலமாக பெற முடியும்.

கோவில்பட்டியில் இருந்து வட மாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பும் பணி தீவிரம்

$
0
0

கோவில்பட்டி:  லாரி ஸ்டிரைக் முடிவிற்கு வந்ததையடுத்து கோவில்பட்டியில் இருந்து தீப்பெட்டி பண்டல்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது.  சுங்க சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற  தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். லாரிகள் இயங்காததால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர்.  விலைவாசி உயரும் அபாயமும் ஏற்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தர்மபுரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் பிரதான தொழிலாக விளங்கும் தீப்பெட்டி தொழிலும் லாரி ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டது. ஸ்டிரைக் காரணமாக தீப்பெட்டி  பண்டல்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும், தீப்பெட்டி தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடும் நிலவியது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் தீப்பெட்டி ஆலைகள், குடோன்கள், லாரி ஷெட்டுகளில் தேக்கமடைந்தன. தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையில் இருந்து வந்த உற்பத்தியாளர்கள்,  தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூடினர். இந்நிலையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. லாரிகள் வழக்கம்போல் இயங்க தொடங்கின. கோவில்பட்டி பகுதியிலும் லாரிகள் நேற்று முன்தினம் முதல் இயங்க தொடங்கியதால், கடந்த 8 நாட்களாக வேலையின்றி சிரமப்பட்டு வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் லாரி ஸ்டிரைக்கால்  கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள், குடோன்கள், லாரி ெஷட்டுகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டி பண்டல்களை லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. லாரிகளில்  தீப்பெட்டி பண்டல்களை ஏற்றும் பணிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.26 ஆயிரம் டன் கோதுமை நெல்லை ரயில் நிலையத்திற்கு ரயில் வேகன்களில் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் இந்த  உணவுப் பொருட்கள், உடனே இறக்கப்பட்டு குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும். நெல்லைக்கு மகாராஷ்டிர மாநிலம், புனேயில் இருந்து 26 ஆயிரத்து 800 டன்  கோதுமை ரயில் வேகன்களில் ஏற்றி வரப்பட்டது. இவை  நெல்லை  ரயில்  நிலையத்தின் பிளாட்பாரத்தில் அடுக்கப்பட்டிருந்தது.  லாரிகள் ஸ்டிரைக் காரணமாக இவை லாரியில் ஏற்றப்படாமல் இருந்தது. ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, அன்று காலை முதலே சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள், நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்தன.  பிளாட்பாரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோதுமை மூட்டைகள் அவற்றில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


லாரி ஸ்டிரைக் முடிந்த பின்பும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரிப்பு

$
0
0

* கேரட் கி. 70க்கு எகிறியது * பொதுமக்கள் ஏமாற்றம்சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் காய்கறி, பருப்பு, ஆயில் உள்ளிட்ட உணவு பொருட்கள்  மற்றும் பிற வர்த்தக பொருட்கள் தேக்கம் அடைந்தன. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட லாரிகள் காய்கறிகள் கொண்டுவரப்படும். லாரி ஸ்டிரைக்கால் வரத்து  குறைந்து காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.  இதற்கிடையில், லாரி ஸ்டிரைக் நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறி லாரிகள் இன்னும் வந்துசேரவில்லை. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. ஸ்டிரைக் வாபஸ் ஆனதால், விலை குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் நேற்று கோயம்பேடு மார்க்கெட் சென்ற மக்கள் ஏமாற்றம்  அடைந்தனர்.காய்கறிகளின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக, சாம்பார் மற்றும் பொறியல் வைப்பதற்கு அத்தியாவசமாக தேவைப்படும் கேரட் விலை கிலோ ரூ.70 வரை விற்றது. அதேபோல், சின்ன வெங்காயமும் கிலோ  ரூ.70க்கு விற்றது. கத்தரிக்காய், சேனைக் கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டானி, இஞ்சி ஆகிய காய்கறிகளும் விலை உயர்ந்து காணப்பட்டன. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் மகாராஷ்டிரா சென்றடையவே 2 முதல் 3 நாட்கள் ஆகிவிடும். பின்னர் அங்கிருந்து காய்கறி ஏற்றி வர 3 நாட்கள் ஆகும். அதேபோல், பெங்களூரில் இருந்து வரவேண்டிய காய்கறிகள்  வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. விலை குறைய இன்னும் 4 நாட்கள் ஆகும்’’ என்றனர்.முருங்கைகாய் கிலோ 7க்கு விற்பனைவெள்ளக்கோவிலில்  இயங்கும் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் தாங்கள்  விளைவித்த முருங்கைகாயை ஞாயிறுதோறும் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.  அவற்றை வியாபாரிகள் வாங்கி,  கோவை, சென்னை உள்பட பல்வேறு மார்கெட்டுக்கு  அனுப்பி வைப்பார்கள்.சில நேரங்களில் வெளிமாநிலத்துக்கு  அனுப்பப்படுகிறது. கொள்முதல் நிலையத்துக்கு நேற்று 15 டன் முருங்கைகாய்  விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகமானதால் விலை சரிந்து  ஒரு கிலோ மரமுருங்கை  ரூ5க்கும், செடி  முருங்கை கிலோ ரூ.7 க்கும் விற்றது. தொடர்ந்து விலை  குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை இரு மடங்கு உயர்வு: ஆடி மாதத்திலும் சூடு பறக்கும் அசைவம்

$
0
0

சென்னை: சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆடி மாதத்திலும் அசைவ பிரியர்கள் போட்டிப்போட்டு மீன்கள் வாங்கிச்சென்றனர். சென்னை காசிமேடு பகுதியில் இருந்து தினமும் ஏராளமான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்கள் பிடித்து வந்து துறைமுகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். மூலக்கடை, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை,  தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கொடுங்கையூர், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, ராயபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து, மீன்களை வாங்கி செல்கின்றனர். நேற்று காலை எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் ஆட்டோ மற்றும் பைக்குகளில் வந்து மீன் வாங்கி சென்றனர். மீன் வரத்தும் அதிகமாக இருந்தது. பொதுவாக ஆடி மாதம் என்றால் பலரும் அம்மனுக்கு விரதம் இருந்து  கூழ்வார்த்து வழிபடுவது உண்டு. இதனால் அசைவ உணவின் விலை வீழ்ச்சி அடையும். ஆனால், இந்த ஆண்டு ஆடி மாதத்திலும்கூட மீன்களின் விலை அதிகமாகவே இருந்தது. அந்த வகையில் வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, நாக்கு, கடம்பா, சீலா, கோலா, தும்பிலி கிளிச்சை, இறால் ஆகிய மீன்களின் விலை இரு மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும்,  நள்ளிரவு முதல் மதியம் வரை மீன் பிரியர்கள் அதிகம் வாங்கி சென்றனர்.

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இனமாடுகள் 40 லட்சத்துக்கு விற்பனை

$
0
0

காங்கயம்: காங்கயம் அடுத்துள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இனமாடுகள் ரூ.40 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இனமாடுகளுக்கான சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில், காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை  கொண்டு வருகின்றனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். மாடுகளை விற்கும் விவாசாயிகளும், வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு.  நேற்று 150 மாடுகள் வந்தன. இதில், காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.95  ஆயிரம் வரை விற்றது.பசுங்கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை விற்பனையானது, காளை கன்றுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடந்த சந்தையில் 75 கால்நடைகள் ரூ.40 லட்சத்திற்கு விற்பனை  நடந்ததாக சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

ஜூலை 30 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.22; டீசல் ரூ.71.63

$
0
0

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.22 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.63-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிவு

$
0
0

மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.68.80 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலைபெற்று ரூ.68.65 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்

$
0
0

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சம் தொட்டு, சாதனை படைத்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 84.07 புள்ளிகள் உயர்ந்து 37,420.90 புள்ளிகளாகவும், நிப்டி 26.60 புள்ளிகள் உயர்ந்து 11,304.15 புள்ளிகளாகவும் உள்ளன.

சீன பொருட்களின் இறக்குமதியால் இந்தியாவில் சிறுதொழில் நிறுவனங்கள் பாதிப்பு...

$
0
0

டெல்லி: சீன பொருட்களின் இறக்குமதியால் இந்தியாவில் சிறுதொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் வேலையிழப்பும் அதிகரித்துள்ளது. எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் கடைபிடிப்பது போல இறக்குமதிக்கு மிகவும் தீவிரமான கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் உள்நாட்டு தொழில்களை காப்பது மற்றும் வேலையிழப்பிற்கு தீர்வு காண முடியும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சீனப் பொருட்களின் இறக்குமதி இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், சீனப் பொருட்களின் இறக்குமதியாளர்களாலும்,  வர்த்தகர்களாலும், இந்திய தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைக்கின்றன அல்லது முழுவதுமாக மூடப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளதுமேலும் சீனாவிலிருந்து பல துறை பொருட்களும் இறக்குமதியாகின்றன. குறிப்பாக பொம்மைகள், டெக்ஸ்டைல், சைக்கிள்கள், மருந்து உற்பத்திக்கான பொருட்கள் என பல பொருட்கள் இறக்குமதியாகின்றன. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடுகளுடன், அவற்றிற்கு தர அளவு நிர்ணயிப்பதும், அவற்றை சோதிப்பதும் அவசியமாகும் என அறிவுறுத்தியுள்ளது. குறைந்த விலையிலான சீன பொருட்கள் இந்தியாவில் வந்து குவிகின்றன.  கடல் மற்றும் தரை வழியில் முறையான சோதனைகள் இல்லாமல் வந்து குவியும் இடமாக இந்தியா உள்ளதாக என்று  நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ள குறிப்பில் நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது. அனைத்து வழிகளிலும் இறக்குமதியாகும் சீன பொருட்களால் உள்நாட்டு உற்பத்தி துறை பாதிக்கப்படுவதாகவும், இதனால் பல்வேறு சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


வரி பாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை போலி நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம்: மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு

$
0
0

புதுடெல்லி: வரி பாக்கிகளை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதற்கு, போலி நிறுவனங்கள் மீது அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் கம்பெனி தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்  பட்டுள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் வகையில் பண மதிப்பு நடவடிக்கை எடுத்த பிறகு, போலி நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இதை தொடர்ந்து கருப்பு பணம் மாற்ற  பயன்படுத்தப்பட்ட மற்றும் வரி ஏய்ப்பு செய்த போலி நிறுவனங்கள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து கம்பெனிகள் பதிவேட்டில் இருந்து 2.30 லட்சம் நிறுவனங்கள் நீக்கப்பட்டன. இதுபோல் மேலும் 2.25 லட்சம்  போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிறுவனங்களிடம் இருந்தும் வரி பாக்கிகளை வசூல் செய்ய வேண்டியுள்ளது. எனவே, இதற்காக நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய நேரடி வரிகள் ஆணையம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த  பணிகளுக்காக அதிகாரிகள் கொண்ட  குழு ஏற்படுத்த வேண்டும் என இந்த ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதற்கிடையில், மத்திய நேரடி வரிகள் ஆணையம், வருமான வரித்துறைக்கு சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், போலி நிறுவனங்களிடம் இருந்து வரி பாக்கிகளை வசூல் செய்ய வேண்டியுள்ளது. எனவே, இவை செலுத்த  வேண்டிய வரி பாக்கி உள்ள அனைத்து விவரங்களையும் திரட்டி, இதுதொடர்பான வழக்கை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிகளை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடித்துவிட  வேண்டும் என்று தெரிவித்துள்ளது. போலி நிறுவனங்கள் பல கம்பெனிகள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், இவற்றிடம் இருந்து வரி பாக்கி வசூலிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, இவை மீண்டும் இயங்கும் நிலையில்  உள்ளதாக மாற்ற வேண்டியுள்ளது. அதோடு, இந்த நிறுவனங்கள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கம்பெனிகள் விவகார அமைச்சகத்திடமும் உதவி கோரப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிக அளவில் பிடிபட்ட களவா மீன்கள்

$
0
0

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அபூர்வ வகையான களவா மீன்கள் அதிகளவில் சிக்கியது.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் காளை மீன், கொடுவா மீன், கிழக்கன் மீன், திருக்கை, வாளை மீன்கள் அதிகளவில் அகப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிராம்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீனவர்கள் சென்றனர். அப்போது பெரும்பாலான மீனவர்கள் வலையில் அபூர்வ வகையான களவா மீன்கள் அதிக அளவில் அகப்பட்டன. பொதுவாக  தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் களவா மீன்கள் அகப்படாது. பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் தான் இந்த மீன்கள் அதிகளவில் அகப்படும். இதுகுறித்து மறவக்காடு மீனவர் சங்கர் கூறுகையில், ‘‘தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் களவா மீன்கள் கிடையாது. ஆழ்கடல் பகுதியில் தான் களவா மீன்கள் அகப்படும். கடல் நீரோட்ட தன்மையால் இடம் பெயர்ந்து தஞ்சை  மாவட்ட கடல் பகுதிக்கு களவா மீன்கள் வந்தது. இதனால் மீனவர்கள் வலையில் அதிகளவில் களவா மீன்கள் அகப்பட்டுள்ளது’’என்றார்.

மத்திய அரசு வரி விதிப்பால் சர்க்கரை விலை திடீர் உயர்வு: அரிசி விலை குறைய தொடங்கியுள்ளது

$
0
0

சென்னை: மத்திய அரசின் வரி விதிப்பால் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. அதே போல விளைச்சல் அதிகரிப்பால் அரிசி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகமாக உள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் அரிசி விலை குறைய தொடங்கியுள்ளது.  அதாவது, ‘’கோ 51’’ ரக அரிசி ரூ.30லிருந்து ரூ.28, ரூபாலி ரூ.32லிருந்து ரூ.30, டீலக்ஸ் பொன்னி ரூ.36லிருந்து ரூ.34, பாபட்லா(முதல்ரகம்) ரூ.44லிருந்து ரூ.42, பாபட்லா(2ம் ரகம்) ரூ.40லிருந்து ரூ.38, இட்லி அரிசி  ரூ.32லிருந்து ரூ.30, இட்லி அரிசி(2ம் ரகம்) ரூ30லிருந்து ரூ.28, வெள்ளை பொன்னி ரூ.52லிருந்து ரூ.48, பொன்னி பச்சரிசி ரூ.44லிருந்து ரூ.42, மாவு பச்சரிசி ரூ.32லிருந்து ரூ.30, பாசுமதி அரிசி ரூ.110லிருந்து ரூ.95, பாசுமதி அரிசி(2ம்  ரகம்) ரூ.90லிருந்து ரூ.75, பாசுமதி அரிசி(3ம் ரகம்) ரூ.80லிருந்து ரூ.65 ஆகவும் விலை குறைந்துள்ளது.தமிழ்நாட்டிற்கு டெல்லி,  அரியானா, சண்டிகர் போன்ற மாநிலங்களில் இருந்து கடலைப்பருப்பு வருகிறது.  இங்கு விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதனால் கடலைப்பருப்பு விலை  தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறத. இதனால், கடலைப்பருப்பு ரூ.55லிருந்து ரூ.65, உளுந்தம் பருப்பு ரூ.70லிருந்து ரூ.75 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும் துவரம் பருப்பு ரூ.75லிருந்து ரூ.70, பாசிப்பருப்பு ரூ.80லிருந்து  ரூ.75 ஆகவும் விலை குறைந்துள்ளது. வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால் விளைச்சல் அதிகரித்து வரும் மாதங்களில் பருப்பு விலை குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.சர்க்கரைக்கு மத்திய அரசு வரி விதித்துள்ளதால் சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது. அதாவது கிலோ ரூ.32 விற்றது ரூ.40க்கு விற்கப்படுகிறது. சேலம் வெல்லம்  ரூ.40லிருந்து ரூ.45, வேலூர் வெல்லம் ரூ.50லிருந்து ரூ.55,  அச்சுவெல்லம் ரூ.60லிருந்து ரூ.65க்கு விற்கப்படுகிறது என்று தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் தெரிவித்துள்ளார். மேலும் சொரூபன் கூறுகையில், “ சர்க்கரைக்கு அரசு மேலும் வரி   விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மேலும் சர்க்கரை  விலை உயர வாய்ப்புள்ளது. நெல் வரத்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைய  வாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

மலர் காவடி 600 முதல் 1,500 ஆடிக்கிருத்திகை காவடி விற்பனை களைகட்டியது

$
0
0

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மூங்கில் கூடைகளுடன் கூடிய காவடி விற்பனையும், மயில் காவடி விற்பனையும் களை கட்டியுள்ளது. ஆடிக்கிருத்திகைக்கு  முருகன் கோயில்களில்  களைக்கட்டும். முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் மலர் காவடிகளை எடுத்தும், மயில் காவடிகள், பால் காவடிகள், வேல்காவடிகள் என பல்வேறு காவடிகளை சுமந்து வந்து  தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பெருவிழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக பரணி விழா வருகிறது. இந்த இரண்டு நாட்களிலும் வடமாவட்டங்களில் பெரும்பாலான முருக பக்தர்கள் திருத்தணிக்கு மலர் காவடிகளுடன் வந்து வழிபாடு செய்கின்றனர்.  இதற்காக வேலூரில் மூங்கிலால் தயாரிக்கப்படும் மலர்க்காவடிகள், மயில்  காவடிகள் விற்பனை களை கட்டியுள்ளது. பெரும்பாலும் வேலூரில் தயாரிக்கப்பட்ட காவடிகள் சென்னை, காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம் சித்தூர், பலமநேர், திருப்பதி, புங்கனூர், மதனப்பல்லி, கர்நாடக மாநிலம் கோலார், பெங்களூரு  போன்ற நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. வேலூரில் காவடிகள் தயாரிப்பில் பாரம்பரிய மூங்கில் கூடைகள் பின்னும் தொழிலாளர்களே ஈடுபடுகின்றனர். மூங்கில் கழிகளை வாங்கி வந்து அதில் மலர்காவடிகள், மயில் காவடிகளை சாலையோரங்களில் தயாரித்து விற்பனை செய்தும், வெளியூர்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.  வேலூரில் ஒரு மலர் காவடி ₹600 முதல் ₹1,500  வரை விற்பனை செய்யப்படுகிறது. மயில் காவடிகள், பால் காவடிகள் ஆகியன ₹1,000 முதல் ₹1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி

$
0
0

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அப்டா மார்க்கெட்டிற்கு நெல்லை, தேனி, மதுரை, மேட்டுப்பாளையம் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் வருகின்றன. அப்டா மார்க்கெட்டில் திங்கள், செவ்வாய், வியாழன்,  வெள்ளி ஆகிய நாட்களில் வாழை சந்தை நடக்கிறது. நேற்றைய சந்தையில் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்ததால், விலை குறைந்த நிலையில் விற்பனையானது. 80 காய்கள் கொண்ட செவ்வாழை தார் ₹550க்கு  விற்பனையானது. இதுபோல் 40 காய்கள் கொண்ட பெரிய ஏத்தன் தார் ₹320க்கும், 100 காய்கள் கொண்ட நாட்டுபேயன் ₹200க்கும், 150 காய் கொண்ட ரசகதளி ₹300க்கும் விற்பனையானது.  இதுபோல் 150 காய் கொண்ட மோரீஸ் ₹250க்கும், 125 காய் கொண்ட வெள்ளைதொழுவன் ₹250க்கும், 150 காய்கள் கொண்ட மட்டி குலை ₹500க்கும் விற்பனையானது. 150 காய்கள் கொண்ட பாளையங்கோட்டை தார்  ₹200க்கும் விற்பனையானது. வாழைத்தார் உற்பத்தி அதிகரிப்பால் போதிய விலை கிடைக்காமல் உள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும்  வாழைத்தார்கள் மலிவாக கிடைப்பதால் அப்டா மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால்  வாழைத்தார்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்தங்கள் இருக்கும் அப்போது வாழைத்தார்கள் விலை உயரும் என விவசாயிகள்  எதிர்பார்க்கின்றனர்.

Viewing all 10627 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>